டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

மும்பை,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் அசத்தி வரும் நடராஜன், கெய்க்வாட், ரியான் பராக் ஆகிய வீரர்களை தேர்வுக்குழு கழற்றி விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதனால் இம்முறையும் கோப்பையை வெல்வது கடினம் என்று பல இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் நடராஜன் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

அவரிடம் அந்த யார்க்கர் பந்துகளை வீசும் திறன் இருக்கிறது. மேலும் அதிக அளவு வேரியேசன்கள் உள்ளது. அதை அவர் மீண்டும் மீண்டும் செய்து வருகிறார். அதனால் தான் அவர் இந்திய டி20 அணியில் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கக்கூடிய முக்கியமான கடைசிக்கட்ட ஓவர்களில் அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் சிறப்பாக செயல்படும் போது இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.