இன்ஸ்டாகிராம் பதிவால்… பறிபோன ஈகுவடார் அழகு ராணியின் உயிர்

கியூவிடோ,

ஈகுவடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பர்ராகா காய்புரோ (வயது 23). 2022-ம் ஆண்டு நடந்த மிஸ் ஈகுவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இவருக்கும் போதை பொருள் கடத்தல்காரரான லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு உள்ளது என நம்பப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன் சிறையில் நடந்த கலவரத்தில் நாரிரோ பலியானார்.

ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் காய்புரோவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் காய்புரோ, உணவு விடுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி ஆக்டோபஸ் செவிசே என்ற பெயரிலான உணவை வாங்கி மதிய உணவு இடைவேளையின்போது சாப்பிட தயாரானார்.

அப்போது, தன்னுடைய இருப்பிடம் பற்றிய விவரத்துடன் அதனை இன்ஸ்டாகிராமில் பதிவாக வெளியிட்டார். அதுவே அவருக்கு வினையாகி போனது. இதனை பார்த்து, அந்த உணவு விடுதிக்கு 2 மர்ம நபர்கள் ஆயுதத்துடன் வந்தனர்.

இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சியில், நபர் ஒருவருடன் காய்புரோ பேசி கொண்டிருக்கிறார். அப்போது, உணவு விடுதிக்கு வந்த சேர்ந்த ஆயுதமேந்திய 2 பேரையும் அவர் பார்க்கிறார். அவர்கள் இருவரில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, 2-வது நபர் துப்பாக்கியுடன் ஓடி சென்று காய்புரோ மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த நபர் என இருவரையும் சுட்டுள்ளார்.

இதன்பின்பு, 2 பேரும் சம்பவ பகுதியில் இருந்து தப்பி சென்றனர். இதில், 3 முறை குண்டு பாய்ந்ததில் காய்புரோ படுகாயமடைந்து உயிரிழந்து விட்டார். நாரிரோவின் மனைவி இந்த படுகொலையை அரங்கேற்றியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

நாரிரோவின் மொபைல் போனில் காய்புரோவின் புகைப்படங்கள் இருந்தன. ஆடம்பர கார்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை காய்புரோவுக்கு அவர் அளித்த புகைப்படங்களும் சான்றுகளாக கிடைத்தன.

வழக்கு விசாரணையின்போது அழகு ராணி காய்புரோவுடனான தொடர்பு பற்றி வெளியிட வேண்டாம் என நாரிரோ, தன்னுடைய கணக்காளரிடம் கெஞ்சி கேட்டு கொண்டார். இந்த விவரம் அவருடைய மனைவிக்கு தெரிந்து விட்டால் ஒரே கலவரம் ஆகி விடும் என பயந்து போயிருக்கிறார் என வழக்கறிஞர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.