கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது: பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவுறுத்தல்

சென்னை: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கடும் வெப்பம் நிலவி வருவதால் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கோடை விடுமுறை அனைத்துபள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும், பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில் கட்டாயமாக சிறப்புவகுப்புகள் நடத்தக் கூடாது.

இதுசார்ந்து தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். அதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமும் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.