“பிரச்சார செலவுக்கு நிதி இல்லை” – தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

புதுடெல்லி: பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் காங்கிரஸ் தனக்கு வழங்கிய சீட்டை கட்சியிடமே திருப்பி வழங்கியுள்ளார் ஒடிசா மாநிலம் புரி தொகுதி வேட்பாளர் சரிதா மொஹாந்தி. இந்தச் செய்தி காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் தனது மனுவை வாபஸ் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் வேட்பாளர் சரிதா மொஹந்தி ஒடிசாவின் புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மறுப்பு தெரிவித்து, காங்கிரஸ் தனக்கு வழங்கிய சீட்டை கட்சியிடமே திருப்பி வழங்கியுள்ளார். ஒடிசாவில் மக்களவைத் தேர்தல் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்நிலையில், சரிதா மொஹந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு இன்று (சனிக்கிழமை) எழுதிய கடிதத்தில், “தேர்தலுக்கு செலவு செய்ய என்னிடம் போதிய நிதி இல்லை. கட்சியிடம் நிதி வழங்குமாறு முறையிட்டேன். ஆனால் கட்சி சார்பிலும் நிதி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் என்னால் போட்டியிட இயலாது.

நான் தேர்தல் செலவுக்கு நிதி வேண்டும் என கட்சியை நாடியபோது , சொந்த பணத்தையே செலவு செய்யுங்கள் எனக் கட்சி என்னிடம் தெரிவித்தது. நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது பணியை விடுத்து அரசியலுக்குள் நுழைந்தேன். நான் சேமித்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் இதற்காக செலவு செய்துவிட்டேன்.

நான் நன்கொடை கூட திரட்டி செலவு செய்ய முயற்சித்தேன், ஆனால் ஆளும் பிஜு ஜனதா தளமும், எதிர்க்கட்சியான பாஜகவும் பண மலையின் மீது அமர்ந்திருக்கிறார்கள். இந்தகைய சூழலில், என்னால் போட்டியிட இயலவில்லை. எனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏழு சட்டப்பேரவை தொகுதியில், பலவீனமான வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது. பலம் பொருந்திய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நான் மக்களை மையப்படுத்திய பிரச்சாரத்தை தான் முன்னெடுக்க விரும்பினேன், ஆனால் நிதி பற்றாக்குறையால் அதுவும் சாத்தியமில்லை. காங்கிரஸின் நிதியை பாஜக முடக்கி வைத்துள்ளது. காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். நிதி நெருக்கடியால் புரி மக்களவை தேர்தலுக்கான சீட்டை நான் கட்சியிடமே திருப்பித் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலில், ஒடிசா மாநிலத்தின் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் (பிஜேடி) பினாகி மிஸ்ராவிடம் மொகந்தி தோல்வியடைந்தார். மிஸ்ரா 5,23,161 வாக்குகளும், மொகந்தி 2,89,800 வாக்குகளும் பெற்று பின்தங்கினார். இத்தொகுதி வரலாற்று ரீதியாக காங்கிரஸ் மற்றும் பிஜேடியின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.