IPL 2024: மும்பை பிளே ஆப் போக இன்னும் வாய்ப்பிருக்கு… இந்த கணக்கை பாருங்க!

Mumbai Indians Play Off Scenarios: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிஎல் என்றாலே பலருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்தான் ஞாபகம் வரும். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது. 2013, 2015, 2017, 2019, 2020 என ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை மிரட்டியிருக்கிறது. 

மற்ற அணிகள் சிஎஸ்கேவை கண்டு நடுங்கும் என்றால், சிஎஸ்கேவே நடுங்கும் அணியாக மும்பை உள்ளது. குறிப்பாக மும்பை அணியை சிஎஸ்கே இதுவரை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதில்லை. 2019ஆம் ஆண்டில் கடைசியாக மும்பை அணி, சிஎஸ்கேவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. சிஎஸ்கே அணியை அந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி மாஸான வெற்றியை பதிவு செய்தது. அதன்பின் சிஎஸ்கே 2 கோப்பைகளை வென்றிருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்களால் அந்த தோல்வியை மட்டும் இன்று வரையிலும் மறக்க முடியாது. 

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி

அத்தகைய மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பின் கோப்பையை வெல்லவே இல்லை எனலாம்.  குறிப்பாக இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை. கடந்தாண்டு பிளே ஆப் வரை வந்த அந்த அணி ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணியிடம் தோல்வியடைந்து குவாலிஃபயர் 2 போட்டியோடு வெளியேறியது. தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

ஆனால், 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை தூக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது மும்பை அணி நிர்வாகம். அந்த அணிக்கு அப்போது ஆரம்பித்தது வேட்டு… ஆம், தொடர்ந்து தொடர் தொடங்கும் முன்னும் சரி, பின்னரும் சரி மும்பை அணி தொடர் விமர்சனங்களுக்கு உள்ளானதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியும் ஒரு காரணமானது. மைதானத்தில் பார்வையாளர்கள் எதிர்ப்பு கூரல் எழுப்பும் அளவிற்கு பாண்டியாவின் மீது வெறுப்பு பேச்சுகள் அதிகமானதும் இதனால்தான். 
 
1 சதவீதம் தான் வாய்ப்பு

அதேபோல், தொடர்ந்து மும்பையும் இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. 11 போட்டிகளில் விளையாடி 3இல் மட்டுமே வென்றுள்ளது மும்பை. பலமான அணியாக தோற்றமளித்தாலும் ஒரு குழுவாக செயல்பாடாமல் இருப்பதால் அந்த அணி தோல்வியடைகிறது என வல்லுநர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர். அந்த அணி தற்போது கடைசி இடத்தில் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் இன்னும் 3 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. அந்த அணி 99 சதவீதம் தொடரில் இருந்து வெளியேறிவிட்டாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்னும் 1 சதவீதம் வாய்ப்புள்ளது. அந்த 1 சதவீதம் வாய்ப்பு என்ன என்பதையும், அதற்கு சூழல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் இதில் காணலாம். 

இந்த 3 விஷயங்கள் நடக்கணும்

முதலாவதாக, மும்பை அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளில் வென்றாக வேண்டும். இன்றிரவு ஹைதராபாத் போட்டி நடைபெற உள்ளது. அடுத்து கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அணிகளும் டாப் 4 இடங்களை பிடிக்க முட்டிமோதும் அணிகளாகும். 

இரண்டாவதாக, மும்பை அணி பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் இனி எந்த அணிகளும் 12 புள்ளிகளை தாண்டக் கூடாது. தற்போதைய நிலையில் லக்னோ, ஹைதராபாத், சென்னை ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன. எனவே, இதில் குறைந்தபட்சம் 2 அணிகளாவது அதன் அனைத்து போட்டிகளிலும் இனி தோல்வியடைய வேண்டும். கொல்கத்தா, ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் டாப் 2இல் உள்ளதால் அந்த அணியை மும்பையால் தாண்ட முடியாது. இருப்பினும், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் அது மும்பை அணிக்கும் சாதகமாக அமையும்.

மூன்றாவதாக. மும்பை இந்தியன்ஸ் அணி அதிக நெட் ரன்ரேட்டை நோக்கிச் செல்ல வேண்டும். தற்போது -0.356 உள்ள நிலையில், பாஸிடிவ் நெட் ரன்ரேட்டுக்கு மும்பை அணி வர வேண்டும். ஆக, மும்பை மூன்று போட்டிகளையும் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதாவது 12 புள்ளிகளை பெற்றிருக்கும் அணிகளை விட அதிக நெட் ரன்ரேட்டை மும்பை பெற வேண்டும். 

இந்த மூன்று சூழல்களும் அமைந்தால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் குறித்து சிந்திக்க முடியும். கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அனைத்து சாத்தியக்கூறுகளையும் தெரிந்துகொள்வதும் நல்லதுதான். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடமே அந்த நம்பிக்கை இல்லை என்பதே கசப்பான உண்மை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.