ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத் துறை சோதனை: காங்கிரஸ் அமைச்சரின் செயலர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் செயலர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.

ஜார்க்கண்டில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆலம்கீர் ஆலம்,ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். தலைநகர் ராஞ்சியில் உள்ள இவரது உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ஓர் அறையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.

அதிக அளவில் பணம் இருந்ததால், அதை எண்ண 6 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இயந்திரங்கள் இடைவிடாது வேலைசெய்ததில் அவற்றில் சில பழுதடைந்தன. இதையடுத்து, புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பணம் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர். பணம் எண்ணும் பணி 12 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இதுவரை ரூ.30 கோடி கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி துறையில் தலைமை பொறியாளராக இருப்பவர் வீரேந்திரா கே.ராம். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் தனி செயலர் சஞ்சீவ் லால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்று அமலாக்கத் துறை இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

வழக்கின் பின்னணி: ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி துறையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சுரேஷ் பிரசாத் வர்மா என்ற இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மாநில ஊழல் தடுப்பு பிரிவு கடந்த 2019 நவம்பரில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உறவினர் அலோக் ரஞ்சன் பெயரில் அவர் சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுரேஷ் பிரசாத் வர்மாவுக்கும், ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் வீரேந்திரா கே.ராமுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே தற்போது அமைச்சரின் செயலர் சிக்கியுள்ளார்.

ஜார்க்கண்டில் மக்களவை தேர்தல் வரும் 13-ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், அமைச்சரின் செயலர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி கூறும்போது, ‘‘செயலர் வீட்டிலேயே இவ்வளவு பணம் சிக்கினால், அமைச்சர்களின் வீடுகளில் எவ்வளவு இருக்கும். ஆனால், அவர்களோ அமலாக்கத் துறை தொந்தரவு தருவதாக பழிபோடுகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.