பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாணவர்கள் எதிர்காலத்தில் தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: பிளஸ் 2 தேர்வில் சிறப்பான சாதனைகளை படைத்து, புதிய அத்தியாயத்தை தொடங்கும் தேர்வு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். தேர்வு முடிவுகளில் மகிழ்ச்சிஅடையாதவர்களுக்கு, இந்த ஒரு தேர்வு நீங்கள் யார் என்பதை வரையறுக்காது. உங்களது தலையை உயர்த்தி, சவால்களை உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர் கொள்ளுங்கள். எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளரவேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் மாணவர்கள் உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க காத்திருக்கின்றன. உயர்கல்வியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பிளஸ் 2 தேர்வில் ஏறத்தாழ 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் துவண்டு விடாமல் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுவதற்கான வழிவகைகளை காண வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத வகையில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுகளில் வெற்றிபெற வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அதேபோல, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர்ஜி.கே.வாசன், பாமக தலைவர்அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.