“தாக்கரே குடும்பத்துக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக நான் இருப்பேன்!” – மோடி போடும் புது கணக்கு?

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்ததாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு இருக்கிறது. சிவசேனாவை இரண்டாக உடைத்தாலும் வரும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே மீதான பா.ஜ.கவின் அணுகுமுறை இருக்கும் என்ற கருத்துகள் வெளி வர தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பா.ஜ.க வட்டாரங்கள் பேச தொடங்கியுள்ளதாம். அதனை நிரூபிக்கும் வகையிலே பிரதமர் மோடியின் பேச்சுக்கள் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரை விமர்சிக்கும் அளவுக்கு உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கவில்லை. குஜராத் கலவரத்தின் போது நரேந்திர மோடியை குஜராத் முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தது. பால் தாக்கரே தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தினார். எனவே தாக்கரே குடும்பத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி மரியாதை உண்டு. அதனை நிரூபிக்கும் வகையில் மோடியின் சமீபத்திய பேட்டியும் இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பால் தாக்கரே குடும்பம் மீது எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. பால் தாக்கரே மீதான அன்பு காரணமாகவே பா.ஜ.கவுக்கு அதிகப்படியான எம்.எல்.ஏ.க்கள் இருந்த போதிலும் சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்கினோம். உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த பிறகு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பதாக இருந்தது. ஆனால் பால் தாக்கரேயிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்கினோம். உத்தவ் தாக்கரே அல்லது அவரது குடும்பத்தினற்கு அரசியல் தவிர்த்து வேறு எதாவது பிரச்னை என்றால் அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் உத்தவ் தாக்கரே அனைத்து பொதுக்கூட்டங்களுலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்க தயங்கவில்லை. அப்படி இருந்தும் பிரதமர் மோடி உத்தவ் தாக்கரேயை விமர்சிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது குறித்து கருத்து கருத்து தெரிவித்த பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ.க தலைவர் ஒருவர், ”அரசியலுக்கு அப்பாற்பட்டு உத்தவ் தாக்கரேயிக்கு பிரதமர் மோடி உதவுதாக கூறி இருந்தாலும் தேவைப்பட்டால் அரசியல் ரீதியாகவும் பிரதமர் உதவுவார்” என்றார்.

உத்தவ் தாக்கரே

ஆனால் உத்தவ் தாக்கரே இவ்விவகாரத்தில் பா.ஜ.கவுடன் சமாதானமாக செல்ல வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. சிவசேனாவை இரண்டாக உடைத்து மகாராஷ்டிரா அரசியலை 100 சதவீதம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர பா.ஜ.க முயற்சிப்பதாக உத்தவ் தாக்கரே நினைக்கிறார். அதோடு அரசியல் ரீதியாக உத்தவ் தாக்கரேயை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஏக்நாத் ஷிண்டேயை பா.ஜ.க முதல்வராக்கி இருப்பதாக உத்தவ் தாக்கரே கருதுகிறார். இதில் யார் இறங்கி வரப்போகிறார் என்பது தேர்தகுக்கு பின்னர் தான் தெரிய வரும். மக்களவை தேர்தலிலும் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுவதை தவிர்த்துள்ளது. பா.ஜ.கவும் சிவசேனா(உத்தவ்)வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது தற்போதைய துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பட்னாவிஸ்தான் சிவசேனாவை இரண்டாக உத்ததில் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.