மகள் மாதப்படி வாங்கிய குற்றச்சாட்டில் பினராயி விஜயன் மீது புகார்; மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்!

கேரள மாநிலத்தில் கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி (சி.எம்.ஆர்.எல்) அலுவலகத்திலும், நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை இன்வெஸ்டிகேசன் பிரிவு கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி ரெய்டு நடத்தியது. அதில் சிக்கிய ஒரு டயரியில் ‘மாதப்படி’ என்ற கணக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விபரங்கள் இருந்துள்ளன. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக்’ கம்பெனியின் பெயரும் இருந்துள்ளது. வீணா விஜயனின் கம்பெனிக்கு 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் பணம் கொடுத்ததற்கான கணக்குகள் இருந்துள்ளன. அதுகுறித்து விசாரித்ததில், கேரள கடற்கரையில் கருமணல் தோண்டி எடுக்க பத்து ஆண்டுகளுக்கு மேலாக முயன்றுவரும் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் சாப்ட்வேர் அப்டேட் செய்வதற்காக பல தவணையாக ஒரு கோடியே எழுபத்தி இரண்டு லட்சம் ரூபாய் வீணா விஜயனின் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் அதுபோன்ற ஒரு சாப்ட்வேர் அப்டேட் அந்த கம்பெனியில் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மாதப்படி குறித்த டயரி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. கொச்சி அமலாக்கத்துறை வீணா விஜயன் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்தது. மேலும் சி.எம்.ஆர்.எல் நிர்வாக இயக்குநரை விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. இது அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பியிருந்தது. 

பினராயி விஜயன்

இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாடன் முதல்வர் பினராயி விஜயனின் மகள் மாதப்படி வாங்கிய விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என திருவனந்தபுரம் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த புகாரில் சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் கம்பெனி கடற்கரையில் மணல் எடுப்பதற்கான ஒப்ப்பந்தத்தை நீட்டிக்க முதல்வரின் மகளுக்கு மாதப்படி வழங்கி உள்ளது என கூறியிருந்தார். அந்த குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்த தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி விஜிலென்ஸ் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேத்யூ குழல்நாடன் எம்.எல்.ஏ அதற்கான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார்.

சி.எம்.ஆர்.எல் கம்பெனி நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா

நேற்று அந்த மனு விசாரணைக்கு வந்திருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், `குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஒரு பேப்பரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த மனுதாரரால் இயலவில்லை. குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் ஒரு பேப்பர் கூட கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. சி.எம்.ஆர்.எல் கம்பெனி பல அரசியல் தலைவர்களின் பெயர்களில் நன்கொடை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சருக்கு எதிராக மட்டும் விசாரணை வேண்டுமென மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்லவா. ஊழல் தடுப்பு சட்டப்படி ஆதாரங்கள் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாடன்

இது குறித்து எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாடன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பினராயி விஜயனை தண்டிக்க வேண்டும் என்று நான் மனு கொடுத்ததாகவும் அதில் கோர்ட் தீர்ப்பளித்ததாகவும் பலரும் தவறாக கருதுகின்றனர். 2019 முதல் 2023 வரை சி.எம்.ஆர்.எல் கம்பெனிக்கு ஒப்பந்தத்தை நீட்டித்த விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நான் கோர்ட்டில் மனு அளித்திருந்தேன். பினராயி விஜயனின் குடும்பத்துடன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, அவரை டார்கெட் செய்தோ இந்த மனுவை கோர்ட்டில் ஆஜராக்கவில்லை. பொதுமக்களுக்காகத்தான் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.