“தேர்தலுக்குப் பிறகு ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தை உடைக்க பாஜக திட்டம்” – வி.கே.பாண்டியன்

கோபல்பூர்: “ஒடிசாவில் எதிர்க்கட்சியான பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை. பிஜு ஜனதா தளத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அன்று கோபல்பூரில் தொலைக்காட்சி செய்தியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “2014 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 120 தொகுதிகளில் வெல்வோம் என்ற இலக்குடன் இயங்கி பாஜகவினர் தோல்வியை தழுவினார்கள். 2019 தேர்தலில் அவர்களது இலக்கு என்னவென்று எனக்கு தெரியவில்லை.

ஆனால், 2024 தேர்தலில் 50 அல்லது 60 இடங்களை பெற்றால் போதும் என்ற இலக்குடன் இயங்குகிறார்கள். தேர்தலுக்குப் பிறகு பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். இது அவர்களின் உட்கட்சி வியூகமாக கூட இருக்கலாம் என நான் கருதுகிறேன். இதை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நாம் பார்த்துள்ளோம்.

இதற்கு முந்தைய தேர்தலிலும் சரி, இப்போதும் சரி, ஒட்டுமொத்த சக்திகளும் ஒடிசாவில் வாக்கு சேகரிக்கவும், பரப்புரையிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்களை மக்கள் துளியும் நம்பவில்லை. மக்களின் நம்பிக்கையை பெற்றவர் முதல்வர் நவீன் பட்நாயக். வரும் ஜூன் 9-ம் தேதி ஆறாவது முறையாக முதல்வராக அவர் பதவி ஏற்பார் என நம்புகிறேன்.

மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60 தொகுதிகளில் போட்டியிட அவர்கள் வசம் வேட்பாளர்கள் இல்லை. அதனால் பிஜு ஜனதா தள வேட்பாளர்களின் அறிவிப்புக்காக காத்திருந்தனர். அதன் மூலம் தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட நபர்களை இழுப்பது அவர்கள் திட்டம். இதுதான் ஒடிசாவில் பாஜகவின் நிலை.

அதேபோல தேர்தல் நேரத்தில் மட்டும் ஒடியா மொழியின் மீது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பற்று வருகிறது. மற்ற நேரங்களில் மத்திய அரசு ஒடியா மொழியின் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட வழங்க முன்வருவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.