உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

சென்னை: உடல் பருமனைக் குறைக்க நடந்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக, பம்மல் தனியார் மருத்துவமனையின் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்தும், அந்த மருத்துவமனையை மூடவும் செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

உடல்பருமன் சிகிச்சை: உடல் பருமனைக் குறைக்க நடந்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஎம்எஸ் இணை இயக்குநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த (12.04.2023) அன்று புதுச்சேரியை சார்ந்த செல்வநாதன் என்பவரின் மகன் S.ஹேமச்சந்திரன்(26) என்பவருக்கு உடல்பருமன் சிகிச்சைக்காக (Weight – 145.5 kg, Height – 166 cm, BMI – 52.8 kg/m2) மருத்துவர் பெருங்கோவை டாக்டர் ரேலா மருத்துவமனையில் சந்தித்து ஆலோசனை பெற்று, Lap. Gastric bypass Surgery மற்றும் Diet Chart குறித்து மருத்துவரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஜெயின் மருத்துவமனைக்கு பரிந்துரை: பிறகு 1 வருடம் கழித்து 06.04.2024 அன்று நோயாளி மீண்டும் மருத்துவர் பெருங்கோவை டாக்டர் ரேலா மருத்துவமனையில் அதே சிகிச்சைக்காக சந்தித்து ஆலோசனை பெற்று, மேல்குறிப்பிட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் ரேலா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேற்கூறிய அறுவை சிகிச்சையை செய்ய 6 முதல் 8 லட்சம் பணம் செலவாகும் என்று மருத்துவர் நோயாளியிடமும், நோயாளியின் உறவினர்களிடமும் கூறியுள்ளார்.

எங்களிடம் அவ்வளவு பணவசதி இல்லை என்று அவர்கள் கூறியதும், மருத்துவர் பெருங்கோ, பம்மலில் உள்ள B.P.ஜெயின் மருத்துவமனையில் இதே அறுவை சிகிச்சையை செய்தால் 3 முதல் 4 லட்சம் வரை தான் செலாகும் என்று கூறி உள்ளார். மேலும், டாக்டர் ரேலா மருத்துவமனையில் உள்ளது போல் அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சை வசதிகள் அனைத்தும் இதே மருத்துவமனையிலும் உள்ளது என்று கூறி அவர்களை B.P.ஜெயின் மருத்துவமனைக்குச் சென்று உள்நோயளியாக சேரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதயதுடிப்பு நின்றதால்… – இதனைத் தொடர்ந்து 21.04.2024 அன்று காலை 11.15 மணியளவில் B.P.ஜெயின் மருத்துவமனையில் ஹேமச்சந்திரன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 22.04.2024 அன்று காலை 8.45 மணியளவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொருட்டு அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவர் பெருங்கோவால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது காலை 9.45 மணியளவில் நோயாளிக்கு திடீரென இதயத்துடிப்பு நின்றதால் (Cardiac Arrest) அதற்கான High end equipments (ECMO) மற்றும் உரிய மருத்துவர்கள் ஜெயின் மருத்துவமனையில் இல்லாததால் Cardiac arrest-க்கான முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 1 மணிநேரம் தாமதமாக 22.04.2024 அன்று காலை 11.35 மணியளவில் டாக்டர் ரேலா மருத்துவமனைக்கு நோயாளி மாற்றப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, டாக்டர் ரேலா மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் உடல்நிலை முன்னேற்றம் அடையாததால், VA-ECMO என்ற உயிர்காக்கும் கருவி 22.04.2024 அன்று மாலை 6.10 மணியளவில் பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பிறகு நோயாளிக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏதும் இன்றி உடல்நிலை மிகவும் குன்றி சிகிச்சை பலனின்றி 23.04.2024 அன்று இரவு 9.05 மணியளவில் நோயாளி இறந்துள்ளார்.

பெற்றோரின் ஒப்புதல் இல்லை: இந்நிகழ்வில், நோயாளியின் பெற்றொர் அளித்த புகாரின் பேரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் ஆர்.இளங்கோ மகேஸ்வரனின் அறிவுரையின்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) தலைமையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் (ஆய்வு) மற்றும் இணை இயக்குநர் (நலப்பணிகள்) செங்கல்பட்டு மாவட்டம் அவர்களுடன் மருத்துவ ஆய்வுக்குழுவானது 2024 மே 3ம் தேதியன்று பம்மல் B.P.ஜெயின் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், நோயாளியின் பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்கு முன், முறையாக ஒப்புதல் படிவம் (Informed Written Consent) பெறப்படவில்லை என்பது தெரியவந்தது.

மருத்துவமனையை மூட உத்தரவு: மேலும், தகுதியில்லா செவிலியர்களை கொண்டு அறுவை சிகிச்சை அரங்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும், அறுவை சிகிச்சையின் போது ICU மருத்துவர்கள், பொது மருத்துவர், Cardiologist ஆகியோர் பணியில் இல்லாததும், உயர்தர மருத்துவ உபகரணங்கள் (ECMO) இல்லாததும் மற்றும் நோயாளியை டாக்டர் ரேலா மருத்துவமனைக்கு காலதாமதமாக மாற்றப்பட்டது முதலான பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைபடுத்தும்) சட்டம், 1997 விதி 5(2)-ன்படி பம்மல் B.P.ஜெயின் மருத்துவமனையின் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைபடுத்தும்) சட்டம், 2018-ன் படி வழங்கப்பட்ட அனுமதி (TNCEA) சான்றிதழ் தற்காலிகமாக நீக்கம் (Temporary Cancellation)செய்தும் மற்றும் மருத்துவமனையை மூடுவதற்கு Competent Authority / செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநரால் (நலப்பணிகள்) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோயாளிக்கு மருத்துவ வசதிகள் குறைவாகவும், அறுவை சிகிச்சையின் போதோ, அறுவை சிகிச்சைக்கு பின்போ திடீரென்று ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை சரி செயவதற்கான மருத்துவர்கள் இல்லாத இடத்திலும், போதுமான தகுதியும், பயிற்சியும் இல்லாத செவிலியர்களை வைத்து அறுவை சிகிச்சையை செய்ததாலும் மருத்துவர் பெருங்கோ மீதும் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற மருத்துவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.