யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வட மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (16/05/2024) திறந்து வைத்தார்.

இதன்போது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவும் வகையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒதுக்கீட்டின் கீழ் 10 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 12 தையல் இயந்திரங்களும் பயனாளிகளுக்குவழங்கி வைக்கப்பட்டது.

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்த அம்மாச்சி பாரம்பரிய உணவகம் கைகொடுக்கும் என இதன்போது உரையாற்றிய ஆளுநர் தெரிவித்தார்.

பெண்களுக்கு பொருளாதார விடுதலை கிடைக்கும் போது, அது குடும்பம், சமூகத்திற்கு கிடைக்கும் விடுதலையாக அமையும் எனவும் ஆளுநர் கூறினார்.

“கிராமிய அபிவிருத்திக்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆளுமை பெற்றவையாக காணப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அற்ற நிலையிலும், அரச அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் தற்போது செயற்படும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களின் ஆளுமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்படும் இவ்வாறன செயற்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும் பெண்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தங்களை, தாங்களே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.இதனூடாக பெண்கள் தங்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தாங்களே தீர்வை பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” என வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.