ஐ.பி.எல். இறுதிப்போட்டி: மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்..?

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இதனையடுத்து நடப்பு தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாலை பெய்த மழை காரணமாக கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அவ்வாறு ஒருவேளை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

அந்த வகையில் இன்று முழுவதும் மழை பெய்து ஒரு ஓவர் கூட வீசப்படாமல் போனால் நாளை ரிசர்வ் டேவிற்கு போட்டி தள்ளி வைக்கப்படும். ஒருவேளை நாளை ரிசர்வ் டேவிலும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இறுதிப்போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். அதோடு விதிமுறைப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.