பாக்., மீது இந்தியா தாக்கு| Dinamalar

நியூயார்க்: அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாத குழுக்கள், ஐ.நா.,வின் தடைக்கு அஞ்சி மனிதநேய அமைப்புகள் போல உருமாறி செயல்பட்டு வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பொருளாதார தடைகளின் சாதக, பாதகங்கள் குறித்த கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:

ஐ.நா., விதிக்கும் பொருளாதார தடைகள் ஒரு நாட்டில் சட்டப்பூர்வமாக மக்களுக்கு கிடைக்கும் உரிமைகளை தடுப்பதாக இருக்கக் கூடாது.அதேசமயம், பயங்கரவாத குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு மனிதநேய அடிப்படையில் சலுகைகள் வழங்கும்போது தீவிர மாக ஆராய்ந்து முடிவெடுப்பது முக்கியமாகும். இந்தியாவின் அண்டை நாட்டில், ஐ.நா.,வால் தடை செய்யப்பட்டவை உட்பட பல பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இவை, ஐ.நா.,வின் தடைக்கு அஞ்சி, மனித நேய அமைப்புகள் போல உருமாறி, அதன் வாயிலாக பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுகின்றன. பயங்கரவாத தாக்குதலுக்கும், மனித கேடயமாக பயன்படுத்துவதற்கும் ஆட்களை தேர்வு செய்கின்றன. எல்லை தாண்டி பயங்கரவாத செயல்களை விரிவுபடுத்துகின்றன. இவற்றை தடுக்க மனித நேய அடிப்படையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து ஐ.நா., கண்டிப்பாக தீவிர ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.