#சற்றுமுன் || வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தமிழக அரசு கோரிக்கை.!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், ஏற்கனவே பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கக்கூடாது என்றும், பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் என்றும், இருதரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 3000 பக்கம் அடங்கிய வாதங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு சற்றுமுன் (15.02.2022) உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, “வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம்” என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. 

மேலும், “5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மேல்முறையீடு மனுக்களை மாற்றி விசாரிக்க வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.