ரூ.15 கோடி 'டிபாசிட்' செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவு

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாகவும், விஷால் நிறுவனம் ஒப்புக் கொண்டது.இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், அந்தப் படத்தை திரையிட்டதால் கிடைக்கும் வருவாயை, நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதிசெந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. லைகா நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இருப்பதை மனுதாரர் நிறுவனம் நிரூபித்துள்ளது. விஷால் நிறுவனம் தரப்பில், 15 கோடி ரூபாய் மட்டுமே கோபுரம்பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாகவும், 21.29 கோடி ரூபாய் கோருவதை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட்டை, தேசிய வங்கியில் செலுத்த, விஷால் நிறுவனத்துக்கு உத்தரவிடப்படுகிறது. அதன் ரசீதை, பதிவாளர் ஜெனரலிடம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும் 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.