காங்கிரஸ் மீண்டும் பலம் பெற வேண்டும்.. கத்காரி போட்ட "குண்டு".. பாஜகவில் பரபரப்பு!

காங்கிரஸ்
கட்சி மீண்டும் பலம் பொருந்திய கட்சியாக மாற வேண்டும். அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்று மத்திய அமைச்சர்
நிதின் கத்காரி
கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மீண்டும் பலம் பெற வேண்டும் என்று தான் உண்மையிலேயே விரும்புவதாகவும் கத்காிர கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கத்காரி பேசும்போதுதான் இந்த விருப்பத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஜனநாயகம் தழைத்தோங்க வலிமையான காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். இது எனது உண்மையான விருப்பம். தொடர் தோல்விகளால் நலிவுற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று, அதன் தலைவர்கள் கட்சி மாறாமல் இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

பலவீனமான காங்கிரஸ் ஓரம் கட்டப்பட்டு அதன் இடத்தை பிராந்திய கட்சிகள் கைப்பற்றி உருவாகும் எதிர்க்கட்சிகள் கூட்டணி என்பது நல்ல அறிகுறி அல்ல. ஜனநாயகம் என்பது இரு சக்கரங்களைக் கொண்டது. ஆளும் கட்சி மற்றும் வலுவான எதிர்க்கட்சி ஆகியவைதான் அந்த இரு சக்கரங்கள் ஆகும். ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்க வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே காங்கிரஸ் வலிமை பெற வேண்டும்.

ஜவஹர்லால் நேரு இதற்கு நல்லதொரு உதாரணம். அடல் பிஹாரி வாஜ்பாய் லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றபோது, அவருக்குரிய மரியாதையை தொடர்ந்து கொடுத்தார் நேரு. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு என்பது முக்கியமானது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். காங்கிரஸ் தலைவர்கள் தோல்விகளால் மனம் துவண்டு விடாமல் இருக்க வேண்டும். கட்சி தாவ முயலக் கூடாது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து அதில் உறுதியாக இருக்க வேண்டும். தங்களது கடமையில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தோல்வியிலிருந்து நாம் மீண்டு வர முடியும். எப்போதுமே தோல்வி என்று வந்தால், ஒரு நாள் நிச்சயம் வெற்றியும் வரும் என்றார் கத்காரி.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கனவை நோக்கி
பாஜக
வேகமாக நடை போட்டுக் கொண்டுள்ளது. பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவால் இழுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் பலம் பெற வேண்டும், கட்சி உடையக் கூடாது, காங்கிரஸ் வலிமையுடன் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என்று கத்காரி பேசியிருப்பது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், காங்கிரஸாருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்திமேற்கு வங்க சட்டசபையில்.. எம்.எல்.ஏக்கள் “கும்மாங்குத்து”.. 5 பாஜகவினர் சஸ்பென்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.