“கட்சி செலவில் குடும்பத்துடன் சென்றதில் தவறில்லை!" -எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு திமுக பதில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் சர்வதேச எக்ஸ்போ 2020 நடந்துவருகிறது. 2020-ல் நடக்க வேண்டிய எக்ஸ்போ, அப்போது உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு, 2021 செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் மார்ச் 30-ம் தேதியுடன் எக்ஸ்போ முடிவடையும் நேரத்தில், கடந்த 25-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்று, துபாய் எக்ஸ்போவில் உள்ள இந்திய அரங்கினுள், தமிழக அரங்கினைத் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு அரங்கைத் திறந்துவைத்த ஸ்டாலின்

அதன்பின்னர், துபாய் பொருளாதாரத்துக்கான கேபினட் அமைச்சரையும், வெளிநாடு வர்த்தகத்துக்கான இணை அமைச்சரையும் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடிய ஸ்டாலின், துபாய் முதலீட்டாளர்களுடன் கலந்துபேசி சில ஒப்பந்தங்களையும் பரிமாறிக்கொண்டார். துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு அபுதாபி சென்ற ஸ்டாலின் அங்குள்ள அமைச்சர்களையும், முதலீட்டாளர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஸ்டாலின்

கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலியின் லூலூ நிறுவனம் துபாயில் உலகின் மிகப்பெரிய சூப்பர் மார்கெட்டை நடத்திவருகிறது. அந்நிறுவனம் தமிழகத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டது.

லூலூ நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் ஷாகுல் ஹமீது என்ற தொழிலதிபர் துபாயிலும் பிசினஸ்களைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் தமிழகத்தில் 1,600 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுதவிர, கும்பகோணத்தைச் சேர்ந்த ‘வொய்ட் ஹவுஸ்’ என்றழைக்கப்படும் தொழிலதிபர் ஒருவரும் 300 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறார். ஆக மொத்தம் துபாய் மற்றும் அபுதாபியில் 6 நிறுவனங்களுடன், 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம், 14,700 பேருக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மொத்த முதலீடுகள்

இந்தச் சூழலில் ஸ்டாலின் துபாய் சென்றதிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என எதிர்க்கட்சியினர் பலர் ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் சென்றது குறித்து விமர்சித்துவருகிறார்கள். ‘முதலீடுகளை ஈர்க்கச் செல்லவில்லை, முதலீடு செய்வதற்காகச் சென்றிருக்கிறார்’ என்கிறார் அண்ணாமலை. ‘ஃபேமிலி ட்ரிப் சென்றிருக்கிறார் முதல்வர்’ என்கிறார் எடப்பாடி.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி

இதற்குத் தி.மு.க-வின் ரியாக்‌ஷன் என்ன? என்பரை அறிய, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதி மோகனிடம் பேசினோம். “குற்றம்சுமத்திவரும் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வரின் இந்தப் பயணம் வெற்றி பெற்றதையும், முதலீடுகள் குவிந்ததையும் தாங்கிக்கொள்ள, ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான், குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில்கூடத்தான் உலக முதலீட்டாளர் மாநாட்டினை ஜெயலலிதா நடத்தி, சுமார் 2,000 கோடிகளுக்கு முதலீடுகளை மேற்கொண்டதாக அறிவித்தார்கள். அதெல்லாம் உடனடியாகவா நிறைவேறியது? எந்தத் திட்டத்தையும் ஒப்பந்தம் போட்டவுடனேயே நிறைவேற்ற முடியாது. தற்போது போடப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களில் நூற்றில் 80 சதவிகிதமாவது கண்டிப்பாக துரிதமாக நிறைவேற்றப்படும். ஒரு மாதத்தில் கண்டிப்பாக இதுபற்றித் தெரியவரும்.

சபாபதி மோகன் திமுக

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கி பாதியில் விட்டுச்சென்றார்கள். தி.மு.க மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க, ஜெயலலிதா மோனோ ரயில் திட்டம் தொடங்கப்போகிறோம் என்றார், எதிர்ப்புக்காரணமாக நிறுத்தினார். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டியது தி.மு.க. அதனைத் திறந்துவைத்து அவர் பெயரில் கல்வெட்டு வைத்துக்கொண்டார் ஜெயலலிதா. இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சென்னை முதல் வேலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்தனை பெரிய எம்.என்.சி நிறுவனங்களும் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டவைதான். அதனால், துபாய் முதலீடுகளைப் பற்றி எந்த ஒரு சந்தேகமும் அடையத்தேவையில்லை.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

குடும்பத்துடன் ஸ்டாலின் துபாய் சென்றதுகுறித்தும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த காலங்களில் எத்தனையோ தலைவர்கள் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்து போயிருக்கிறார்கள். இது சாதாரண நடைமுறைதான். எடப்பாடி துபாய் சென்றபோதுகூட குடும்பத்துடன் தான் சென்றார். தி.முக கட்சி செலவில் குடும்பத்தைக் கூட்டிச்செல்கிறார் ஸ்டாலின். இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? மிகவும் கீழ்த்தரமாக இறங்கி விமர்சிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.