முஸ்லீம் பிரதமரானால் இந்துக்கள் கொல்லப்படுவார்கள் – மீண்டும் சாமியாரின் வெறுப்புப் பேச்சு!

யதி நரசிங்கானந்த் சரஸ்வதி. இவர் வடக்கு உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் இருக்கும் பிரபலமான தாஸ்னா தேவி கோவிலின் தலைமை சாமியார். வயது 58. கடந்த ஜனவரியில் இவரும் மற்ற இந்துத்துவ அமைப்பு தலைவர்களும் ஹரித்வாரில் வெளிப்படையாக முஸ்லீம்களை கொல்ல வேண்டும் என்று பேசினார்கள். உபி தேர்தல் காலத்தில் பேசப்பட்ட இந்த வெறுப்புணர்வு பேச்சு ஜனநாயக சக்திகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் பேசும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும் போலீசில் புகார் கொடுத்தார்கள். பிரதமர் மோடிக்கும் பகிரங்க கடிதம் எழுதப்பட்டது.

நரசிங்கானந்த் சரஸ்வதியின் வெறுப்புப் பேச்சு புதிதல்ல. இவர் முஸ்லீம்களை தீய சக்தி என்கிறார். அவர்களை அழித்து விட்டு இஸ்லாம் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறார். அதே போன்று பெண் அரசியல் வாதிகள் ஆண் அரசியல்வாதிகளது காமக்கிழத்திகளாக இருக்கிறார்கள் என்றும் பேசியிருக்கிறார்.

இவரது வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை மீது யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவா ஆட்சி நிலவும் உத்திரப்பிரதேசத்திலயே 20 வழக்குள் உள்ளன. அதில் கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டுதல், கடத்தல் போன்றவை உள்ளன. “இந்த வழக்குகள் எல்லாம் எங்களை அலங்கரிக்கும் நகைகள் போன்றவை, பிரச்சினை இல்லை” என்கிறார் சாமியாரின் உதவியாளர் அனில் யாதவ். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி செய்தியாளர் சாமியாரிடம் கேட்ட போது கோபமடைந்த சாமியார் மைக்கை தூக்கி எறிந்து விட்டார்.

ரஷ்யாவில் பொறியியல் பட்டம் படித்து பிரிட்டனில் வேலை பார்த்து 2007 இல்தான் இவர் தாஸ்னா கோவிலில் பூசாரியாக சேர்கிறார். இவர் உபி பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவரும் கூட. அவர்கள்தான் இவரை இன்று வரை பாதுகாக்கிறார்கள்.

இவரது வெறுப்பு பேச்சு சர்வேச அளவில் கண்டனத்தை பெற்ற பிறகு கடந்த ஜனவரியில் ஒரு கண்துடைப்பிற்காக இவர் கைது செய்யப்பட்டார். உபியில் மோடியையோ, பாஜகவையோ எதிர்ப்போரை கொடிய உபா சட்டத்தில் கைது செய்வது வாடிக்கை. இந்தியாவிலேயே உபா சட்டத்தில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டிருப்பது உபியில்தான். ஆனால் இந்த சாமியாரும் இவரது சகபாடிகளும் சாதாரண பிரிவுகளில்தான் கைது செய்யப்பட்டார்கள்.

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்

இவரது கைதுக்கு முன்பு 14 வயது முஸ்லீம் சிறுவன் தவறுதலாக தாஸ்னா கோவிலுக்குள் நுழைந்து விட்டான். அதற்காக அவனை கொடூரமாக தாக்கியது சாமியாரின் படை. அவன் ஒரு பயிற்சி பெற்ற கொலையாளி என்றார் சாமியார்.

தாஸ்னா கோவில் இருக்கும் காசியாபாத் நகரின் மக்கள் தொகையில் 80% முஸ்லீம்கள். இக்கோவில் இருசமூகத்தினராலும் போற்றப்படுகிறது. வருடந்தோறும் நடக்கும் தசரா விழாவில் இரு சமூகத்தினரும் கலந்து கொள்வர்கள். ஆனால் தற்போது கோவிலின் வெளியே “முஸ்லீம்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

நரசிங்கானந்த சாமியாரின் உயிருக்கு ஆபத்து என்று பாஜக அரசு இவரது பாதுகாப்பிற்கு என்று மாதந்தோறும் 31 இலட்ச ரூபாய் செலவழிக்கிறது. இந்த பாதுகாப்பில் இருந்து கொண்டு இந்த சாமியார் முஸ்லீம்களுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

ஜனவரியில் கைது செய்யப்பட்ட நரசிங்கனாந்த சாமியார் பிப்ரவரி மாதம் பிணையில் வெளிவந்து விட்டார். வெளிவந்த உடன் இந்த சாமியார் வழக்கம் போல தனது வெறுப்புப் பேச்சுக்களை பேச ஆரம்பித்து விட்டார்.

தலைநகர் தில்லியில் ஹந்து மகாபஞ்சாயத் என்றொரு கூட்டம் நேற்று ஞாயிறு 3.4.2022 அன்று நடந்தது. அதில் 500 பேர் கலந்து கொண்டனர். அதில் பேசிய நரசிங்கானந்த், “ஒரு முஸ்லீம் பிரதமரானால் இருபது வருடத்தில் 50% இந்துக்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்படுவார்கள். 40% இந்துக்கள் கொல்லப்படுவார்கள். இதுதான் இந்துக்களின் எதிர்காலம். இதை மாற்ற வேண்டுமென்றால் ஆம்பளை சிங்கமாக ஆயும் ஏந்துங்கள்” என்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரமான வார்த்தைகளை பேசியிருக்கிறார்.

இவ்வளவிற்கும் இந்த தில்லி கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. கூட்டம் நடக்கும் போதும் அதை நிறுத்தவோ இல்லை கூட்ட அமைப்பாளர்களை கைது செய்யவோ முற்படவில்லை. கூட்டத்தில் பேசிய நரசிங்கானந்த் சாமியார், இந்துக்கள் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அவர்களுக்கு சண்டையிட கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும்” தி காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படத்தை பாருங்கள். அதில் இந்துக்கள் அவர்களது மண்ணை விட்டு, சொத்தை விட்டு, மகள்களை விட்டு சென்று விட்டார்கள். நீங்களும் அப்படி சண்டை போடாமல் வெளியேறினால் இந்தியப் பெருங்கடலில்தான் மூழ்க வேண்டும். அதுதான் உங்களுக்குரிய ஒரே வாய்ப்பு” என்றும் விஷத்தை கக்கியிருக்கிறார்.

சுதர்சன் நியூஸ் எனும் இந்துத்துவ பத்திரிகையின் ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹங்கே, “ நான் சிவாஜியை எனது முன்னோடியாக கருதுகிறேன், நீங்கள் அவுரங்கசிப்பை போற்றுகிறீர்கள், நான் ராமரை வழிபடுகிறேன், நீங்கள் பாபரின் வாரிசுகள், நான் காசியில் சிவன் கோவிலை விரும்புகிறேன். நீங்கள் மசூதிக்காக சண்டையிடுகிறீர்கள். இதில் சமத்துவம் எங்கே இருக்கிறது” என்று சாமியாரோடு போட்டி போட்டு பேசியிருக்கிறார்.

இதெல்லாம்
மோடி
வீற்றிருக்கும் தில்லியில் நேற்று நடந்த நிகழ்வு. இந்தக் கூட்டத்தை பதிவு செய்யச் சென்ற பத்திரிகையாளர்கள் சிலர் கூட்டத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர்.

ஜனவரி 15 அன்று ஹரித்வார் போலீசார் கைது செய்யப்பட்ட நரசிங்கானந்த சாமியார் மீது 153A மற்றும் 295 A பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. இவை இரு சமூகக் குழுக்களிடையே பேதத்தை தோற்றுவித்தல், மத உணர்வை புண்படுத்துதல் போன்ற சாதா பிரிவுகள்தான். அதனால்தான் ஹரித்வார் நீதிமன்றம் இவருக்கு பிப்ரவரி 8 அன்று பிணை வழங்கியது.

தற்போது பிணையில் சுதந்திரமாக உலவும் இந்த சாமியார் மீண்டும் அதே வெறுப்புப் பேச்சை பேசியிருக்கிறார். இப்படி ஒரு பேச்சை எதிர்தரப்பாக ஒரு முஸ்லீம் பேசியிருந்தால் அவரை பயங்கரவாதியாக சித்தரித்து, உபா சட்டத்தில் கைது செய்து ஆயுள்தண்டனையே கொடுத்திருப்பார்கள். ஆனால் மோடியின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு மட்டும் பாதுகாப்பு இல்லை. முஸ்லீம்களை கொல்வோம் எனும் இந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. நம்புவோம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.