'கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்!' – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஏஐசிடிஇ

தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேல், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான், மயுரிபோல் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யப் படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

போர் காரணமாக, உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள், மத்திய பாஜக அரசு சிறப்பு விமானம் மூலம் பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. படிப்பை பாதியில் விட்டு விட்டு தாயகம் திரும்பியதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனினும், உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்படாது என்றும், அவர்களது மேற்படிப்புக்கு உதவி செய்யப்படும் என்றும் மத்திய – மாநில அரசுகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென
ஏஐசிடிஇ
(
AICTE
) எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கல்வி நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கல்வி நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 20 ஆயிரம் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பி உள்ளனர். அவ்வாறு நாடு திரும்பிய மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்கி உதவ வேண்டும். மேலும், உக்ரைனில் எந்த பாடப்பிரிவில், எந்த ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதையே இங்கேயும் தொடர அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.