கர்நாடக அமைச்சர் மீது ஊழல் புகார் கூறிய ஒப்பந்ததாரர் மர்ம மரணம் – விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ஊழல் செய்வதாக புகார் கூறிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் (40) இந்து வாஹினி அமைப்பின் தேசிய செயலாளராக இருந்தார். இவர் அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி சந்தோஷ் பாட்டீல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், “கர்நாடக அமைச்சர்கள் அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் 40% கமிஷன் கேட்கின்றனர்” என கூறியிருந்தார்.

இதுகுறித்து சந்தோஷ் பாட்டீல் கூறும்போது,, “பெலகாவியில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டேன். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 40% கமிஷன் கொடுத்தால் மட்டுமே நிதியை ஒதுக்கீடு செய்வதாக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறிவிட்டார்.

மற்றொரு புறம் அரசு திட்ட பணிகளுக்காக எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் தற்போது எனக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கிறார்கள். எனவே அரசு உடனடியாக எனது நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பிரதமர் மோடி தலையிட்டு பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும்” என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரப்பா அவரை மிரட்டியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று உடுப்பியில் உள்ள சாம்பவி விடுதியில் சந்தோஷ் பாட்டீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தோஷ் தங்கியிருந்த அறையில் இருந்து முக்கிய ஆவணங்களும், கடிதமும் கைப்பற்றப்பட் டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இறப்பதற்கு முன்பாக சந்தோஷ் தன் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில், ‘‘என் மரணத்துக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாவே காரணம். அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறுகையில், “அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டுக்களை கூறிய சந்தோஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸார் தாமாக முன்வந்து ஈஸ்வரப்பா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு பதிவு செய்யவேண்டும். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதுடன், உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றார்.

இதேபோல மஜதவைத் சேர்ந்த முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்டோரும் ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘இந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும். ஈஸ்வரப்பாவுக்கும் அவருக்கும் இடையே நடந்த முரணை பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தேன். அவர் அதனை சட்டப்பூர்வமாக சந்தித்திருக்க வேண்டும். தற்கொலை எதற்கும் தீர்வுஆகாது. விசாரணையின் முடிவு தெரியும்வரை ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய வேண்டியதில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.