சண்டிகர்: பஞ்சாப்பில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் 300யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 2 மாதங்களில் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், உதாரணமாக 640 யூனிட்கள் அல்லது 645 யூனிட்கள் பயன்படுத்தினால் 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்திய கூடுதல் 40 அல்லது 45 யூனிட்டுகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.இதுவரை மின்சார பலன்கள் பெறாத மற்றவர்கள் அனைவரும் மாதத்திற்கு 300 யூனிட்டுகளை இனி பெற்று கொள்ள முடியும். ஆனால் மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்டுகளுக்கு கூடுதலாக மின்நுகர்வு ஏற்பட்டால் அவர்கள் மொத்த மின் உபயோகத்திற்கான கட்டணமும் செலுத்த வேண்டும். இதையடுத்து பஞ்சாப்பில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பகவந்த் மான் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிரைவடைந்த நிலையில் அரசின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வீடு தேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.