திருச்சி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி.!

திருச்சி: திருச்சி அருகே நடைபெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அருகே உள்ள கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் முனியப்பன் . இவர் தனது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேருடன் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.  கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூ அடுத்த அயன்பேரையூர் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது,  பின்னால் வேகமாக வந்த லாரி முன்னால் சென்ற கார் மீது வேகமாக மோதியது.

இதனால், கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கி கொண்ட  கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் முனியப்பன் அவரது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 வயது மகன் கார்முகில் அதிஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரை மீட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்த  சிறுவனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். . இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் லாரியால் இடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.