ஊர்வசியின் வார்த்தையை தாரக மந்திரமாக எடுத்துக்கொண்ட மீராஜாஸ்மின்

பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் துடிப்பும் துள்ளலுமான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இடையில் கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த மீரா ஜாஸ்மின், தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள மகள் என்கிற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதிலும் ஆச்சரியமாக இந்த படத்தில் டீனேஜ் பெண்ணிற்கு அம்மாவாக நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.

பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படம் வரும் ஏப்.,29ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவரிடம் இப்படி ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறீர்களே உங்களுக்கு இமேஜ் பற்றிய கவலை இல்லையா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மீரா ஜாஸ்மின், “இதேபோன்று 17 வருடங்களுக்கு முன்பு நடிகை ஊர்வசி அச்சுவிண்டே அம்மா என்கிற படத்தில் எனக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டபோது அவரிடமும் இதேபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யன் அந்திக்காடு இயக்கும் படம் என்றால் மீரா ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல நடிகை சுகுமாரிக்கு கூட அம்மாவாக நடிக்கவும் நான் தயார் என்று கூறினார் ஊர்வசி.. இயக்குனர் சத்யன் அந்திக்காடு மீது அவர் வைத்திருந்த அதேபோன்ற நம்பிக்கையும் ஊர்வசி சொன்ன அந்த வார்த்தைகளும் தான் இப்போது 'மகள்' படத்தில் டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொள்ள காரணம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.