திருமணத்திற்கு தடையாக இருப்பதாக இளம்பெண்ணை கொல்ல முயற்சி- வாலிபர் வெறிச்செயல்

திருப்பதி:

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது19). இவரது அத்தை மகன் அப்பா கொண்டல் ராவ். சிறு வயது முதலே சுவாதிக்கும், அப்பா கொண்டல் ராவுக்கும் திருமணம் செய்து வைப்பது என அவர்களது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் அப்பா கொண்டல் ராவ், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து இருந்தார். இதனால் மனவேதனை அடைந்த சுவாதி அப்பாகொண்டல் ராவிடம் சென்று என்னை திருமணம் செய்யாமல் வேறு ஒரு ஒரு பெண்ணை ஏன் திருமண நிச்சயம் செய்தாய் என தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தனது திருமணத்திற்கு சுவாதி தடையாக இருப்பாரோ என அப்பா கொண்டல் ராவ் ஆத்திரத்தில் இருந்தார்.

அவர் அப்பகுதியை சேர்ந்த நாகேஸ்வரராவ் (35) என்பவரிடம் தொடர்பு கொண்டு சுவாதியை கொலை செய்ய வேண்டும் என்று அவரிடம் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார்.

நேற்று அதிகாலை சுவாதி மற்றும் அவரது பாட்டி வீட்டின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த நாகேஸ்வரராவ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவாதியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். சுவாதியின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சுவாதி வலியால் அலறி துடித்தார். சுவாதியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுவாதியை மீட்டு அனகாபள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுவாதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அனகாபள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமாராவ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகேஸ்வரராவை கைது செய்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.