ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்: ஜெயக்குமார்

சென்னை: “ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி பாஜக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழச்சியில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது: “பொதுவாகவே எல்லாவற்றுக்கும் ஒரு காரணத்தை உருவாக்கிவிட்டு, ஓபிஎஸ் இப்போது வந்து நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறுவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நீதிமன்றம் சென்று விடிய விடிய இருந்து ஒரு உத்தரவைப் பெற்றது யார்? பொதுக்குழுவுக்கு தமிழகம் முழுவதும் வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் தங்கியிருக்கின்றனர்.

உயர் நீதிமன்றம் சென்று 23 தீர்மானங்களுக்கு மேல் வேறு எதுவும் விவாதிக்கக் கூடாது என்ற உத்தரவை பெற்றது யார்? தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக அண்ணன் ஓபிஎஸ் இருந்துவிட்டு, இப்போதுவந்து பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறுவதை, தொண்டர்களை ஏமாற்றுகிற செயலாகத்தான் பார்க்கமுடியும்.

அனைவருமே பொதுக்குழுவுக்கு கட்டுப்பட்டவர்கள். பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதி முடிவு. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தலைமையிலான தலைமைக்கழக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், ஓபிஎஸ் வரவில்லை. ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.