சென்னை: டி-23 புலியை உயிருடன் பிடிப்பதில் முக்கியப் பங்காற்றிய 3 காவலர்கள், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சிறந்த களப்பணியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுற்றிவந்த 13 வயதான டி-23 புலி நான்கு பேரை வேட்டையாடிக் கொன்றது. அதேபோல் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. 20 நாட்களுக்கு மேலாக வனத்துறையினர் போராடி இந்தப் புலியை உயிருடன் பிடித்தனர்.
இந்தப் பணியின்போது தினமும் காலையில் புலியின் கால் தடத்தை கண்காணித்து புலி நடமாடும் பகுதியை கண்டறிந்து, சோதனை மேற்கொண்டு, புலியை பிடித்தல் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் பொம்மன், மதன், மீனா காலன் ஆகிய மூன்று பேரும் மிகப்பெரிய பங்கு வகித்தனர். இவர்களுக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருது வழங்க தமிழ்நாடு வனத்துறை பரிந்துரை செய்தது.
இதன்படி இவர்கள் 3 பேரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 29-ம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள உலக புலிகள் பாதுகாப்பு தின விழாவில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சிறந்த களப்பணியாளருக்கான விருதை தமிழ்நாடு வனத்துறையை சார்ந்த பொம்மன், மதன் மற்றும் மீனா காலன் ஆகிய மூன்று பேரும் பேருக்கும் வழங்கப்படவுள்ளது.