இன்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடந்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், நாட்டில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சித் தலைவர்கள் மிரட்டுவதை கண்டித்தும் தலைநகர் டெல்லியின் ராஜபாதையில் அமர்ந்து ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை தடுப்புக் காவலில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். மேலும், கே.சி.வேணுகோபால், இம்ரான் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, மத்திய அமைச்சர் அனுராப் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “நாங்கள் காங்கிரஸ் ஆட்சியின் ஊழலுக்கு எதிராக போராடிய காலம் சென்று, இன்று காங்கிரஸ் ஊழல்வாதிகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற அவைகளுக்கு வந்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, போலீசாரின் இந்த கைது நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி தெரிவிக்கையில், “சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு ஆட்சி செய்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தவித விவாதத்தையும் அனுமதிக்க மறுக்கிறார்கள். மக்களுக்காக போராட்டம் செய்தால் தலைவர்களை கைது செய்கிறார்கள். இந்தியா போலீஸ் நாடாக மாறிவிட்டது. மோடிதான் அதன் ராஜா” என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.