கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் திகதி மர்மமான முறையில் இறந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் திகதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் பொலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவினை அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும்போது ஜாமீன் கிடைக்குமா? என்பது பின்னர் தான் தெரியவரும்.