மீரட்: உத்தர பிரதேசத்தில் மகளை கொலை செய்வதற்காக மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் மீரட் அருகேயுள்ள கன்கர்கெடா என்ற நகரை சேர்ந்தவர் நவீன் குமார். இவரது 17 வயது மகள் வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். இதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண் காதலை கைவிடவில்லை.இந்நிலையில், நவீன் குமார் நேற்று முன் தினம் இரவு தன் மகள் மாடியில் இருந்து விழுந்து விட்டாள் எனக்கூறி மருத்துவமனைக்கு துாக்கி வந்தார். அங்கு, வார்டு பாய் நரேஷ் குமாரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, தன் மகளுக்கு விஷ ஊசி போடுமாறு கூறியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர், மருத்துவமனையின் பெண் ஊழியர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து நவீனின் மகளுக்கு பொட்டாசியம் குளோரைடை ஊசி வாயிலாக அதிகளவில் செலுத்தினார்.சற்று நேரத்தில் பரிசோதனைக்கு வந்த டாக்டர், இளம்பெண் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்திருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து மொடிப்புரம் என்ற இடத்தில் உள்ள பியூச்சர் பிளஸ் மருத்துவமனைக்கு அந்தப் பெண் மாற்றப்பட்டார்.
அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்து, பொட்டாசியம் குளோரைடு அதிகளவில் செலுத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கன்கர்கெடா மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வார்டு பாய் நரேஷ் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.ஒரு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஊசி போட்டதை ஒப்புக் கொண்டார்.
அவரை கைது செய்த போலீசார், 90 ஆயிரம் ரூபாய், பயன்படுத்தப்பட்ட ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தந்தை நவீன்குமார் மற்றும் மருத்துவமனையின் பெண் ஊழியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement