சிறுநீரகங்களின் தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நம் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதில் ஒன்று சிறுநீரகம். நமது உடல் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றி உடலை நல்ல நிலையில் வைத்துக் கொள்கிறது. சிறுநீரகத்தை பாதிக்க கூடிய எவ்வித செயல்கலும் இல்லாதவரை அது ஒழுங்காக செயல்பட்டுக் கொண்டு இருக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வலி நிவாரணி மாத்திரை, தொற்றுநோய்கள் ஆகியவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் பணிகள்

  • உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல்

  • நீர்நிலையை சமப்படுத்துதல்

  • உப்பை சமப்படுத்துதல்

  • இரத்தக் அழுத்தத்தை சீர் செய்தல்

  • சிறுநீரகத்தில் சுரக்கும் முக்கிய நாளமில்லா சுரப்பி நீர் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது

  • வைட்டமின் டி யின் உதவியால் எலும்புகளை உறுதிப்படுத்துகிறது.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

சிறுநீர்ப் பாதை நோய் தொற்று

முதுமையில் ஏற்படும் தொற்று நோய்களில் சிறுநீர்பாதை தொற்று மிக முக்கிய இடம் வகிக்கிறது. முதுமையில் அடிக்கடி உடல் நலம் பாதிப்பதற்கும் மற்றும் இறப்பதற்கும் இந்த நோய் தொற்று ஒரு முக்கிய காரணமாகும்.

நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள்

  • முதுமை

  • பெண்கள்

  • முதுமையில் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

  • சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாத நிலை (பிராஸ்டேட் சுரப்பி வீக்கம், புற்ற நோய், சிறுநீர்க் குழாயில் ஏற்படும் மாற்றங்கள், நரம்பு பாதிப்பு)

  • சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் மாற்றங்கள், உதாரணம்: கட்டி, அறுவை சிகிச்சைக்குப் பின், வெளிப்புற பொருட்கள் (சிறுநீர் நீக்கக் குழாய் (catheter), கற்கள்)

  • நீண்டக்கால நோய் தொற்று, உதாரணம்: பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் நாள்ப்பட்ட நோய் தொற்று

நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள்

இளம் வயதில் ஏற்படக்கூடிய ஈ.கொலே (E. coli) பாக்டீரியாதான் முதுமையிலும் நோய் தொற்று வர முக்கிய காரணமாகும். கேத்திடர் மூலம் ஏற்படும் நோய் தொற்று ஒன்றுக்கு மேற்பட்ட கிருமியால் ஏற்படலாம். அது மிக்க எதிர்ப்புச் சக்தியுடையதாகும். இதற்கு கிருமிநாசினியால் எதிர்ப்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காது.

அறிகுறிகள்

காய்ச்சல், குளிருடன் காய்ச்சல், உடம்பு வலி, பசியின்மை, குமட்டல், வாந்தி போன்றவைகள் நோய் தொற்றின் முதல் அறிகுறியாகும். சிறுநீர் அடிக்கடி கழிப்பது மற்றும் கழிக்கும் நேரத்தில் எரிச்சலும், வலியும் ஏற்படலாம். சில சமயங்களில் சிறுநீருடன் இரத்தம் கூட கலந்து வரலாம். மிகவும் வயது முதிர்ந்த முதியவர்கள் சில சமயங்களில் இந்நோய் தொற்றினால் மனம் குழப்பம் அடைந்தவர்கள் போல் தோன்றுவார்கள். நோய் தொற்றினால் சிலருக்கு அன்றாடம் செய்யும் செயல் திறனும் குறைய வாய்ப்புண்டு.

Representational Image

பரிசோதனைகள்

உடல் சிறுநீரகப் பரிசோதனையில் சிறுநீரகத்தில் பூச்சி வளர்வதற்கான பரிசோதனை செய்யவேண்டும். நோயாளியின் நிலை சற்று தீவிரமாக இருப்பின் இரத்த பரிசோதனை, யூரியா, கிரியேடினின், இரத்தத்தில் பூச்சி வளரும் பரிசோதனை, வயிறு ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

சிகிச்சை முறை

முடிந்தால் இரத்த நீர் வறட்சியில்லாமல் இருக்க அதிக நீர் அருந்த வேண்டும். நாளத்துக்குள் க்ளூக்கோஸ் (I.V.fluid) செலுத்துதல், தேவையற்ற மருந்துகளை நிறுத்த வேண்டும் (உ.ம்:: நீர் மாத்திரை, வலி நிவாரணி) தேவையான கிருமி நாசினியைக் கொடுக்க வேண்டும்.

சிறுநீரகக் கற்கள்

கோடையில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கல் பிரச்சனை முக்கியமானது. கொஞ்சம் மனது வைத்து நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முடியும்.

சிறுநீரகக் கல்

நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், அவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, அவை சிறுநீரில் வெளியேறுவதற்கு சிதமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் ஒரு படிகம்போல் படிந்து, கல்போலத் திரளும். கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் ஏற்படுகிறது.

Representational Image

காரணங்கள்

அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது. உடலில் ஏற்படும் நீரிழப்பு, தவறான உணவு முறைகள், குறிப்பாக, உப்பு, மசாலா, புளிப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, குடிநீரில் கால்சியம், குளோரைடு அதிகமாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, உடற்பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு வாய்ப்பைத் தருகின்றன.

அறிகுறிகள்

சிறுநீரகத்துக்குள் கல் இருந்தால், ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அது அடைப்பை ஏற்படுத்தும் போதும்தான் வலி உண்டாகும். முதுகில், வலது அல்லது இடது விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்பபையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் துவாரம்வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, கடுப்பு, ரத்தம் கலந்து வருவது, குமுட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் மேற்கொள்ளும்.

பரிசோதனைகள்

சிறுநீர்ப்பாதையில் உள்ள கல்லைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். கல் எந்த இடத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, எந்த வகையான கல், சிறுநீரகம் பாதிக்கப்படுள்ளதா எனப் பல விவரங்களை இந்த பரிசோதனைகளில் தெரிந்துகொள்ள முடியும்.

Representational Image

சிகிச்சை முறைகள்

சுமார் 5 மி.மீ. அளவுள்ள கற்களை சரியான உணவு முறை, போதுமான தண்ணீர் குடிப்பது, குளுக்கோஸ் ஏற்றுவது, மருந்து, மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம். 1.5 செ.மீ. அளவுள்ள கற்களை “ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி” எனும் முறையில் வெளியிலிருந்தே ஒலி அலைகளைச் செலுத்தி கல்லின் மீது அதிர்வை ஏற்படுத்தி உடைத்துவிடலாம். சிறுநீரக் குழாய், சிறுநீர்ப்பை, சிறநீர்க் குழாய் ஆகியவற்றில் உள்ள கற்களை “யூரிட்ரோஸ்கோப்பி” எனும் முறையில் வளையும் தன்மையுள்ள குழாய்போன்ற ஒரு கருவியை சிறுநீர்த் துவாரம் வழியாக உள்ளே செலுத்தி கற்களை நசுக்கியும் லேசர் கொண்டு உடைத்தும் எடுத்துவிடலாம். ஆனால், சிறுநீரகத்துக்குள் உள்ள கற்களை இந்த முறையில் எடுக்க முடியாது. 2 செ.மீ. க்கும் அதிகமான அளவில் உள்ள கற்களை “நெப்ரோ லித்தாட்டமி” எனும் முறையில் முதுகில் சிறிய துளைபோட்டு அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும்.

கற்கள் ஏற்படாமல் இருக்க

கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம் (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்). அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 5 கிராம் சமையல் உப்பு போதும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Representational Image

இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையை குறைத்துவிடும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

சிறுநீர்ப் பாதையில் கல் உள்ளவர்கள் காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. உலர் பழங்கள், பாதம்பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிபருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா, இறைச்சி போன்ற உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

Representational Image

சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது

இந்த வயதில் சிறுநீரில் ரத்தம் கலந்து வந்தால் காலந்தாழ்த்தாது உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். அதற்குரிய காரணங்களைச் சற்று தெரிந்து கொள்வோம். சிறுநீரில் பூச்சித் தொல்லை, சிறுநீர்ப் பையில் கட்டி, புற்று நோய் மற்றும் சிறுநீர் தாரையில் கல். வலி ஏதுமில்லாமல் சிறுநீரில் இரத்தம் அதிகம் கலந்திருந்தால், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் அல்லது கட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம். பிராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் இருந்தாலும் இத்தொல்லை வரலாம். சிலருக்கு ஆஸ்பிரின் மாத்திரையினாலும் சிறுநீரில் இரத்தம் வரலாம். சில சமயங்களில் சிறுநீரில் இரத்தம் கலந்திருக்காது, ஆனால் சிறுநீர் கருஞ்சிவப்பாக இருக்கும். சென்னா, ரிவாம்பசின், லீவடோபா போன்ற மாத்திரைகளினாலும், மஞ்சள் காமாலையினாலும், பீட்ருட் உண்பதாலும் சிறுநீர் கருஞ்சிவப்பாக இருக்கும்.

சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது ஒரு அபாயத்தின் அறிகுறியாகும். சிறுநீர் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை மற்றும் வயிறு, ஸ்கேன் பரிசோதனை மூலம் சிறுநீரகத்தில் இரத்தம் வருவதை காரணத்தைக் கண்டறிந்து தக்க சிகிச்சையளிக்க முடியும். இத்தொல்லை ஏற்பட்டால் காலம் கடத்தாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.