மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு பேருந்தில் பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

வேலூர்: அரசு பேருந்தில் பயணித்த மாணவிக்கு இரவில் நேர்ந்த கொடுரம் கேட்பவர்களை பதபதைக்கச் செய்கிறது…ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். கல்லூரியில் தொடர் விடுமுறைகள் வந்ததால், மருத்துவக் கல்லூரி மாணவி, சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் தமிழக அரசு (SETC) பேருந்தில் ஏறி வேலூர் நோக்கி பயணம் செய்துள்ளார்.

அப்போது மாணவி இரவில் உறங்கும் நேரம் பார்த்து அதே பேருந்தில் ஸ்டெப்ணி ஓட்டுனராக பணியாற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் பகுதி மேட்டு தெருவை சேர்ந்த நீலமேகம் (46) என்பவர் மாணவியின் அருகில் அமர்ந்து சில்மிஷம் செய்து பாலியல்தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பேருந்து வேலூர் வந்ததும் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த தமிழக காவல் துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் நீலமேகத்தை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த பேருந்து நடத்துனர் இல்லாத பேருந்து, நீண்ட தூர பயணம் என்பதால் 2 ஓட்டுனர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது ஓட்டுநரை ஸ்டெப்னி ஓட்டுநர் என்று அழைப்பது வழக்கம்.

பலரும் பயணிக்கும் பேருந்தில், மாணவிக்கு ஓட்டுநர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிர்பயா வழக்கில் மருத்துவ மாணவிக்கு நடைபெற்ற கொடுமைகளுக்குப் பிறகு சட்டங்கள் கடுமையானாலும், அது பலருக்கும் எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கவலையளிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.