யார் இந்த கூகுள் கொண்டாடும் இந்தியர் அன்னா மணி?

வரலாறு எப்போதும் சாதனையாளர்களை தோற்கடிப்பதில்லை. அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டாலும், படாமல் போனாலும் அவர்கள் மறைந்த பிறகு அவர்கள் ஆற்றிய சேவையால் காலத்திற்கும் அவர்களை நினைவு கூர்வதே வரலாறு அவர்களுக்கு தரும் வெற்றி.

அப்படி இந்திய அறிவியல் ஆராய்ச்சி துறையில் மைல்கல்லாக இருந்த அன்னா மணியை அவரது 104வது பிறந்தநாளில் கௌரவித்து டூடுல் வெளியிட்டுள்ளது கூகிள்.

யாரிந்த அன்னா மணி?
கேரளாவில் 1918ஆம் ஆண்டு பெருமேடு பகுதியில் சிரிய-கிறிஸ்துவ குடும்பத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறந்தவர் அன்னா. சிறுவயது முதலே வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் படிப்பதிலும் புதிதாய் ஏதோ ஒன்றை கற்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த அன்னாதான் இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பு முன்னோடி என்றால் மிகையாகாது. தன் வயது குழந்தைகளை போல் அன்றி எப்போதும் புத்தங்களை படிப்பதில் ஆர்வமாக இருப்பாராம்.

கேரளாவில் தன் பள்ளி படிப்பை முடித்த அன்னா சென்னையில் உள்ள ப்ரெசிடென்சி கல்லூரியில் தான் இயற்பியல் மற்றும் வேதியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் தனது ஆராய்ச்சி படிப்பை IISc யில் முடித்தார். அப்போதுதான் நோபல் பரிசு பெற்ற சர்.சிவி. ராமன் அவர்களிடம் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி பயின்றார். பிறகு லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் படிக்கச் சென்று விட்டார். அங்கேயே வானிலை சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதையும் கற்றுக்கொண்டார்.

ஏன் அவரை நினைவு கூறுகிறோம்?
படித்து முடித்து லண்டனிலேயே தங்கி வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தும் அதை உதறி தள்ளி தனது தாய்நாட்டிற்காக சேவை செய்ய வந்து விட்டார். இன்று நாம் பயன்படுத்தும் வானிலை முன்னறிவிப்பு உபகரணங்களிற்கெல்லாம் முன்னோடி இவர்தான். இந்தியாவிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வானிலை சார்ந்த உபகரணங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார் அன்னா.

1950இல் இந்தியாவில் சோலார் ரேடியேஷன் கண்காணிப்பு நிலையங்களின் நெட்ஒர்க்கை நிறுவியவர் இவர். மேலும் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் மூலங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அன்னா. அது குறித்து தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

அறிவியல் உணர்வு மட்டுமின்றி அவர் மிகுந்த நாட்டுப்பற்று மிக்கவரும் கூட. காந்திய மார்க்கத்தை கடைப்பிடித்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் கதர் ஆடைகளையே உடுத்தி வந்தார். மேலும் பல்வேறு சுதந்திர போராட்டங்களுக்கு ஆதரவாகவும் இருந்தார்.

அவர் வாங்கிய விருதுகள் மற்றும் வகித்த பொறுப்புகள்:
1987 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனராக பொறுப்பு வகித்தார்.கே.ஆர்.ராமநாதன் விருது.தேசிய அறிவியல் அகாடமி விருது.
மறைவு
வெறும் ஆராய்ச்சியாளர், நாட்டுப்பற்றாளராக மட்டுமின்றி அன்னா ஒரு சிறந்த பெண்ணியவதியாக வாழ்ந்துள்ளார். பகுத்தறிவு பேசும் அறிவியல் கூட ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நிலவி வந்த காலத்திலேயே அதையெல்லாம் உடைத்து சாதித்து காட்டியவர் அன்னா.

தன் வாழ்நாளின் இறுதி வரை நாட்டுக்காகவே வாழ்ந்து 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட்16 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் உயிர் நீத்தார் அன்னா மணி.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.