தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன் என்பது சரியானதாக இருக்காது – தமிழிசை

கும்பகோணம் அருகே, சுவாமிமைலையில், 23 அடி உயரமுள்ள நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் திருச்சி வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பா.ஜ.க.,வினர் வரவேற்றனர்.

இதையும் படியுங்கள்: அதிமுக சாவி விவகாரம்: ஓ.பி.எஸ், மேல்முறையீடு மனு தள்ளுபடி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தெரிவித்ததாவது: தமிழகத்தில் திருச்சிக்கும், தஞ்சைக்கும் வருவது என் தாய் வீட்டுக்கு வருவது போன்றது. நல்லதொரு ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

தற்போது, இரண்டு மாநில கவர்னராக இருப்பதால், அன்றைய பணியை அன்றே செய்து வருகிறேன். வருங்காலத்தில், ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் என்ன பண்ணி வைத்திருக்கின்றனர் என்று தெரியாது. தெலுங்கானாவிலும், புதுச்சேரியிலும் எனது வேலையை முழுமையாக செய்து வருகிறேன். தமிழகத்தில் இருந்து அழைப்பு வரும்போது, சகோதரத்துவத்துடன் ஏற்றுக் கொண்டு, ஒரு சகோதரியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

தெலுங்கானாவில் கவர்னர் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவதை பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு கட்சி பத்திரிகை அவமதிக்கப்பட்டதாக எழுதி உள்ளது. நான் என்றுமே அவமதிக்கப்படவும் இல்லை; அலறவும் இல்லை. எதைப்பார்த்தும் அலற மாட்டேன். புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான். வேறொரு மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த சகோதரி மதிக்கப்படாவிட்டால், தமிழகத்தில் இருப்பவர்கள் அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

அந்த மனநிலை சரியானது அல்ல. அந்த மனநிலையில் இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இது ஒரு கலாச்சாரம். ஒரு இடத்தில் உறவிவினரோ வேண்டியவர்களோ வந்தால் வரவேற்கும் கலாச்சாரம். அந்த கலாச்சாரத்தை பின்பற்றவில்லை என்பதை தெரியப்படுத்துவது தான் என் பேட்டி. கடந்த 3 ஆண்டு நடந்த நல்லவற்றையும், நன்றாக நடக்காத எல்லாவற்றையும் சொன்னேன்.

நல்லவை நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு கவர்னர் இப்படியும் அவமதிக்கப்படுகிறார் என்று சொன்னேன். அது நான் அலறியதாக அர்த்தம் இல்லை. மதித்தாலும், மதிக்காவிட்டாலும், என்பணி தொடர்ந்து நடக்கும். அவமரியாதை என்னை ஒன்றும் செய்யாது. அவமரியாதை செய்யப்பட்டதாக மகிழும் கூட்டம் இங்கு இருப்பது தான், எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நம்மை சார்ந்தவர்கள் எங்கேனும் அவமதிக்கப்பட்டால், துடிப்பது நம் ரத்தம். அந்த அரசியலுக்குள் நான் செல்லவில்லை. என்னை பற்றி சொன்னதற்காக, பதில் சொல்லி உள்ளேன் அவ்வளவுதான்.

தெலுங்கானாவில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான மூன்று கூட்டங்களும் நடந்த முடிந்துள்ளன. பல லட்சம் ஆசிரியர்கள் பல லட்சம் மக்கள் அதற்கான அடிப்படை பணிகளை செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை. அதில் குறைபாடு இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஆனால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்பது சரியானதாக இருக்காது. இதே மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருத்து சொல்லி உள்ளனர். இதைத்தான் அரசியலாக்க வேண்டாம் என்கிறேன். சமச்சீர்கல்வி என்பது எல்லோருக்கும் ஒன்றுபட்ட கல்வியைத்தான் வழங்குகிறது. வகுப்பறையில் இருந்து. மாணவர்களுக்கு உலகலளாவிய அறிவை தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் பிரதமர்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ளவர்களை அகில இந்திய தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யுங்கள் என்பது தான். எதனால், இதை மறுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் ஏற்றுக் கொள்வார்கள். பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரிடத்திலும் கேட்டுத் தான் முடிவு செய்துள்ளனர்.  மாணவர்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்பதால், இத்தகைய நடைமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், நடைமுறை சிக்கல்கள் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்.

மூன்றாம் மற்றும் 5-ம் வகுப்பு குழந்தைகள் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றனர். உங்களை போல் எல்லோரையும் நினைத்துக் கொண்டால், நாங்கள் என்ன செய்ய முடியும். இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.