புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் தமிழ்ச்செல்வன் (37) என்பவர் தனது விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த விஜி(28), தினேஷ்(26), ரஞ்சித்(27), பக்கிரிசாமி(45), கமல்(25), புனுகு (41), கார்த்திக்(27) ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்து, 8 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுடன், 8 பேரையும் இலங்கை கடற்படையினர் காரை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.