புதுடெல்லி: டி.என்.பி.எஸ்.சியில் பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கால அவகாச கோரிக்கை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘டி.என்.பி.எஸ்.சியில் மதிப்பெண், சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் நிலை என்ன? அதேப்போன்று அதனை அமல்படுத்தும் போது ஏற்படும் சிரமங்கள் என்ன? என்பது தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘ டி.என்.பி.எஸ்.சியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக வரையறை செய்து வருகிறோம். அதனால் எங்களுக்கு கூடுதலாக 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும்,’ என தெரிவித்தார். இந்த ஏற்ற நீதிபதிகள், வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பட்டியலிடுவதாக கூறி ஒத்திவைத்தனர்.