தொடரும் பிட்புல் தாக்குதல்கள்… கான்பூரில் பசுமாட்டின் வாயை கொடூரமாக காயப்படுத்திய நாய்

கான்பூரில் பிட்புல் நாயால் பசுமாடு ஒன்று கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பிட்புல் இன நாய்கள் சமீப காலமாக மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அதுபோன்றதொரு சம்பவம் தற்போது கான்பூரில் நடந்துள்ளது. தனது முதலாளியுடன் வெளியே சென்ற பிட்பில் நாய் ஒன்று பசுமாடு ஒன்றின் வாயை இறுக்கமாக கவ்வி இழுத்து காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான அந்த வீடியோவில் மாட்டின் தாடையை பற்களுக்கு இடையே கவ்வி இழுக்கிறது. மாடு வலியால் துடிப்பதைப் பார்த்த நாயின் முதலாளியும், அங்கிருப்பவர்களும் அதனிடமிருந்து மாட்டை தப்புவிக்க முயற்சிக்கின்றனர்.
குச்சி மற்றும் கையால் நாயை அடித்தும் நாய் விடாமல் மாட்டை கடுமையாக தாக்குகிறது. மிகுந்த சிரமத்திற்கு பிறகே மாட்டை நாயின் பிடியிலிருந்து விடுவிக்கின்றனர். இருப்பினும், மாட்டுக்கு ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.
image
அந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாட்டுக்கு ரேபிஸ் வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்படும் என தலைமை சுகாதார அதிகாரி ஆர்.கே நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பிட்புல்கள் நாய்கள் நடுத்தர அளவு வகையைச் சேர்ந்தவை. இவை மிகவும் மூர்க்கமானவை. எனவே வீட்டில் செல்லப்பிராணியாக வைத்து வளர்க்க நினைப்பவர்களுக்கு கட்டாயம் பயிற்சி தேவை. கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் பிட்புல் இன நாய்களால் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.
image
ஜூலை மாதம் லக்னோவில் வீட்டில் வளர்க்கப்பட்ட பிட்புல் நாயால் 82 வயது மூதாட்டி கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அடுத்த ஒரு மாதத்தில், குருகிராமில் 30 வயது பெண் ஒருவர் பிட்புல் நாயால் தாக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில், காசியாபாத்தில் 11 வயது சிறுவனை பிட்புல் நாய் தாக்கியதில் சிறுவனுக்கு 200 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.