தெலுங்கில் ஒரு வரி வசனம் மட்டுமே பேசியுள்ளேன் ; சல்மான்கான்

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். தற்போது இந்தபடம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சிரஞ்சீவி, சல்மான்கான் இருவரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

மும்பையில் நடைபெற்ற இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசும்போது, பத்திரிக்கையாளர்கள் அவரிடம் தென்னிந்திய படங்கள் இந்தியில் வரவேற்பையும் வெற்றியையும் பெறுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சல்மான்கான் தெற்கிலிருந்து வருபவர்களை நாம் வரவேற்கிறோம்.. வாழ வைக்கிறோம் ஆனால் நம்மைத்தான் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று குறைபட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய சிரஞ்சீவி, “உங்களை கவனிக்கத்தான் நாங்கள் இருக்கிறோமே.. சல்லு பாய் என்னுடைய படத்தின் நடித்தே ஆகவேண்டும் என்று உங்களை ஒப்பந்தம் செய்ததே அதனால் தானே” என்று கூறி அவரை சமாதானப்படுத்தினார்.

அப்போது சல்மான்கான் பேசும்போது, “இந்த படத்தில் நான் ஒரே ஒரு வரி வசனம் மட்டுமே தெலுங்கில் பேசியுள்ளேன். மற்ற அனைத்தும் இந்தியில் தான் பேசி இருக்கிறேன்” என்று கூறினார். மலையாளத்தில் இவரது கதாபாத்திரத்தில் மோகன்லாலின் வலதுகையாக நடித்திருந்த பிரித்விராஜ் வட மாநிலத்திலும் மற்றும் வெளிநாட்டிலும் மட்டுமே வசிப்பதாகவும் மோகன்லாலின் உத்தரவை ஏற்று செயல்படுத்துவதற்காக மட்டுமே கேரளா வருபவராகவும் நடித்திருந்தார். அதனால் தற்போது அதே கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடித்திருப்பதால் அதிகம் தெலுங்கு வசனங்கள் அவருக்கு தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.