பாணந்துறை, எலுவில சந்தி பகுதியிலுள்ள கடையொன்றில் பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை கலந்த மாவா எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர், சுமார் பத்து இலட்சம் பெறுமதியான மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரால் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து கிலோ மாவா போதைப்பொருள்; பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை பகுதியில், பாடசாலை மாணவர்களும், பகுதி நேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும் புகையிலை கலந்த மாவா எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொருப்பாளர், பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்கவின் பணிப்புரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கடை சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழங்கள் விற்பனை செய்யும் கடை என்ற போர்வையில், பாடசாலை மானவர்கள் மற்றும் பகுதிநேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களையும் இலக்காகக் கொண்டு, பொலிதீன் உரைகளில் அடைக்கப்பட்ட 25 கிராம் மாவா போதைப்பொருள் ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை மானவர்கள் மற்றும் பகுதிநேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களும் இதற்கு அடிமையாகி உள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த, நாற்பத்தெட்டு வயதுடைய திருமணமானவர்.