லக்னோ : உத்தர பிரதேசத்தில், இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசிய வழக்கில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அசம் கானுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி.,யில், பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாதியைச் சேர்ந்த மூத்த தலைவர் அசம் கான். இவர், 2019ல் ராம்பூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை துாண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அப்போதைய ராம்பூர் மாவட்ட கலெக்டரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஆஞ்சநேய குமார் சிங் ஆகியோர் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை ராம்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அசம் கானுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பின், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே, நில அபகரிப்பு, பண மோசடி உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அசம் கானுக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement