நம்பர் 311 என்னாச்சு… சிக்னல் கொடுப்பாரா ஸ்டாலின்? அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் பிளான்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009ஆம் ஆண்டிற்கு பின்பு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர். எங்களின் ஒற்றை குறிக்கோள் என்பது ”சம வேலைக்கு சம ஊதியம்” என்பது தான். TRB நியமன ஆணையில் ஊதிய விகிதம் 4500 – 125 – 7000 என்று தான் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணி நியமன அழைப்பு கடிதத்தில் உள்ள ஊதியத்தையும் வழங்கவில்லை.

அதற்கு பின்னர் 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு சுமார் மூன்று லட்சம் இடைநிலை ஆசிரியர்களை மிகக் கடினமான தகுதித் தேர்வு எழுதி அதில் 14 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். இந்த சூழலில் தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியமும் வழங்கப்படவில்லை. ஊதியக் குழுவில் தவறு இழைக்கப்பட்ட பிற துறையினருக்கு ஒரு நபர் ஊதிய குழுவில் 36 பிரிவினருக்கும், 3 நபர் ஊதிய குழுவில் 24 பிரிவினருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது.

எனவே ”சம வேலைக்கு சம ஊதியம்” என்ற திமுகவின் 311வது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை போன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் அளித்த அனைத்து கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார்.

இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி ஒருநாள் அடையாள கவனயீர்ப்பு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால் அரசிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் பருவ விடுமுறையில் மாணவர்களின் நலன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் சென்னையில் உள்ள DPI வளாகத்தில் மீண்டும் மிகக் கடுமையான அகிம்சை வழியிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த விஷயம் தொடர்பாக மாநில செயற்குழுக் கூட்டத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட திட்டத்தை அரங்கேற்றவுள்ளோம். அதாவது, வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என்று தீர்மானம் செய்துள்ளோம். அதற்குள் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.