புதுடெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களில் எத்தனை பேர், ஒன்றிய அரசின் சிறப்பு சலுகையை பயன்படுத்தி பிற நாடுகளில் படிப்பை தொடர்கின்றனர் என்ற அறிக்கையை தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் போர் தொடுத்ததால் அங்கு படித்து வந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இந்த போர் 8 மாதமாக தொடர்வதால் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், இந்தியாவில் தங்கள் மருத்துவ படிப்பை அனுமதிக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு சட்ட விதிகள் இல்லாததால் இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்த ஒன்றிய அரசு, சிறப்பு சலுகை மூலமாக இம்மாணவர்கள் 29 வெளிநாடுகளில் தங்களின் படிப்பை தொடர தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியிருப்பதாக கடந்த செப்டம்பர் 6ம் தேதி விசாரணையின் போது தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி தனது வாதத்தில், ‘போர் காரணமாக உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவ பல்கலைக் கழகங்களில் பயில அனுமதித்தால் அது ஒட்டுமொத்த மருத்துவ கல்வி முறையையும் சீர்குலைக்கும்,’ என தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஒன்றிய அரசின் சிறப்பு சலுகையை பயன்படுத்தி எத்தனை மாணவர்கள் பிறநாடுகளில் தங்களின் படிப்பை தொடர்கின்றனர், இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என அறிக்கை தர வேண்டும்,’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.