ஜப்பானில் தமிழ் பாரம்பர்ய முறைப்படி விவசாயம் செய்து, அங்கிருந்து அந்த அரிசியைக் கொண்டு வந்து ஆலயங்கள் மற்றும் தருமபுர ஆதீனத்திற்கு வழங்கினார் ஜப்பான் நடிகை, அவர் மயிலாடுதுறை ஆலயத்தில் நெஞ்சுருகத் தமிழ் பக்தி பாடல்களைப் பாடி வழிபாடு செய்துள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த பிரபல நடிகை மியா சாகி மசூமி, நடிகையாக இருந்து பணம் ,பெயர், புகழ் சம்பாதித்த அவர் மனநிம்மதியின்றி இருந்து வந்ததாகவும், தமிழ்மொழி மற்றும் சித்தர்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவும், தொடர்ந்து ஜப்பானில் உள்ள ஹராமுரா என்ற தனது சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பர்ய முறைப்படி இயற்கை விவசாய முறையில் நெல் நடவு செய்து, தமிழ்நாட்டில் இருப்பதுபோல் நடவு பாடல்களை பாடி, ரசாயன கலப்பில்லாமல் நெல்பயிர் செய்ததாகவும், அந்தப் பயிருக்கு ‘முருகா’ என்று பெயரிட்டு அறுவடை செய்துள்ளார். அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கித் தமிழகத்திற்கு எடுத்து வந்து பல்வேறு ஆலயங்களுக்கும் அளித்து வருகிறார்.
அதன்படி இன்று (11.11.2022) மயிலாடுதுறை வந்த ஜப்பான் நடிகையுடன் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர், மயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை சந்நிதியில் ருத்ர யாகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
அதனையடுத்து தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சென்று ஆதீன குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யாரைச் சந்தித்து ஆசி பெற்று, தனது வயலில் விளைந்த முருகா நெல்லின் அரிசியைக் காணிக்கையாக சமர்ப்பித்தார். ஜப்பானில் முருகன் ஆலயம் அமைக்க உள்ளதாகவும், அதற்கு ஆதீனம் வருகை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆதீனம் சார்பில் ஜப்பான் நடிகைக்கு முருகன் சிலை மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் முருகன் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
முன்னதாக மயூரநாதர் ஆலயத்தில் முருகன் மற்றும் சிவன் குறித்து தமிழ் பக்திப் பாடல்களை நெஞ்சுருகப் பாடி வழிபட்டது அனைவரையும் கவர்வதாக இருந்தது.
ஜப்பான் நடிகை பேசும்போது,
” தமிழ்மொழி, கலாசாரம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதுபற்றிப் படிக்க ஆரம்பித்த பின்னரே எனக்கு மன நிம்மதி கிடைத்து வருகிறது ” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.