கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது, முஸ்லிம் பெண்ணான பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்களைக் கொன்ற 11 பேரை விடுதலை செய்ய, குஜராத் அரசாங்கத்தால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினராக கோத்ரா தொகுதி எம்எல்ஏ சந்திரசிங் ரவுல்ஜி இருந்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விடுதலை செய்யப்பட்டவர்கள் குறித்து கோத்ரா தொகுதி எம்எல்ஏ சந்திரசிங் ரவுல்ஜி, “அவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள் என்று அறியப்பட்டவர்கள். அவர்களை தண்டிப்பது யாரோ ஒருவரின் தவறான நோக்கமாக இருந்திருக்கலாம். மேலும் அவர்கள் சிறையில் நல்ல பண்புடன் செயல்பட்டார்கள்” என்று அவர் கூறியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலியல் பலாத்காரம் செய்தவர்களை, கொலையாளிகளை நல்ல கலாச்சாரம் கொண்ட பிராமணர்கள் என கொண்டாடுவதாக, எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின. இந்தநிலையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் சந்திரசிங் ரவுல்ஜிக்கு, மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், கோத்ரா தொகுதி பாஜக வேட்பாளாராக சந்திரசிங் ரவுல்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இத்தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.
மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க சதி: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரசிங் ரவுல்ஜி காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார். அவர் 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். பாஜகவிற்கு மாறிய பிறகு, 258 வாக்கு வித்தியாசத்தில் அவர் காங்கிரஸை தோற்கடித்தார் என்பது குறிப்பிடதக்கது.