கெஜ்ரிவாலுக்கு சுகேஷ் சவால்; உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா?

புதுடெல்லி3: ‘டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் நேருக்கு நேர் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தயார்’ என பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சவால் விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டவரும், பிரபல மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர், ‘ஆத் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனக்கு எம்பி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 கோடி பெற்றார். அக்கட்சியினர் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் ரூ.500 கோடி தேர்தல் நிதி திரட்ட கூறினார்’ என்று அடுத்தடுத்து ஆளுநருக்கும், ஊடகங்களுக்கும் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், தனது வக்கீல் மூலமாக சுகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. இதை நிரூபிக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும். அவர்களுடன் நேருக்கு நேராக அமர்ந்து உண்மை கண்டறியும் பரிசோதனையில் பங்கேற்க நானும் தயாராக உள்ளேன்’ என சவால் விடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் பாஜ எம்பி மனோஜ் திவாரி, கெஜ்ரிவாலிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டுமென கூறிய நிலையில், அதே கோரிக்கையை சுகேஷ் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.