திருப்பூர்: அலைபேசியில் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக தலைமை உத்தரவின்படி, திருப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் இன்று விசாரணைக்குழு முன் ஆஜாராகி விளக்கம் அளித்தனர்.
தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பாஜக மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்ஸி மற்றும் திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.