புகழ் அன்பை மட்டுமல்ல கஷ்டங்களையும் கொடுக்கிறது – விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிந்தியிலும், தெலுங்கிலும் லைகர் என்கிற படம் வெளியானது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். நடிகை சார்மி கவுர், பூரி ஜெகன்நாத் மற்றும் பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான இந்தப்படம் வெளியான அன்றே ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி தோல்வி பட்டியலில் இடம்பிடித்தது.

இது ஒருபக்கம் இருக்க, இந்த படத்திற்காக கருப்பு பணம் செலவு செய்யப்பட்டதாக கூறி வழக்கும் தொடரப்பட்டது. குறிப்பாக இந்த படத்திற்கான பணம் இங்கிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு, பின்னர் துபாயிலிருந்து மீண்டும் இங்கே திருப்பி அனுப்பப்பட்டு செலவு செய்யப்பட்டுள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பட தயாரிப்பாளர்கள் மற்றும் இந்த படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு இதுபற்றி விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஏற்கனவே சார்மி, பூரி ஜெகன்நாத் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார் விஜய் தேவரகொண்டா. அவரிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிந்து வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ‛‛அதிகாரிகள் கேட்ட சில கேள்விகளுக்கு நான் விடை அளித்து உள்ளேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்துள்ளார்கள்.. அதேசமயம் அவர்கள் என்னை மீண்டும் வரவேண்டும் என கூறவில்லை.. புகழ் என்பது அன்பை மட்டும் கொண்டுவராது, சில சமயம் கஷ்டங்களையும் கொடுக்கத்தான் செய்கிறது.. இது வாழ்க்கையில் எனக்கு ஒரு அனுபவம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.