குஜராத் தேர்தல்: 19.17 சதவீத வாக்குகள் பதிவு!

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத், சவுராஷ்ட்ரா தொகுதிகளை உள்ளடக்கிய 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதில், 63.31 சதவீத வாக்குகளே பதிவாகின.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் குஜராத் மாநில மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட 61 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியதும், அகமதாபாத் நகர் ரானிப் பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு நேர்ல் சென்ற பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும், ஜனநாயக கடமையை ஆற்றி வரும் வாக்களர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய்ஷாவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அகமதாபாத்தின் நரன்புரா பகுதியில் உள்ள ஏ.எம்.சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் அமித்ஷா தனது வாக்கினை செலுத்தினார்.

இவர்கள் தவிர, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஹர்திக் படேல், பிரதமர் மோடியின் தாயார், எதிர்க்கட்சித் தலைவர் சுக்ரம் ரத்வா, ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுடன் கத்வி, குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர். ஏராளமானோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் மாநில தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 19.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராட் தொகுதியில் இதுவரை அதிகபட்சமாக 25.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹலோல் தொகுதியில் மிகக் குறைந்த அளவாக 12.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. இந்த முறையும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜக தவிர ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் குஜராத்தில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. இந்த முறை ஆம் ஆத்மி கட்சியானது பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.