புயலை சந்திக்கப் போகும் மகாபலிபுரம்: பொங்கும் கடல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்க உள்ள நிலையில் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி தீவிர புயலாகவும் மாறி சென்னையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுகுறைந்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்க உள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தமிழத்திலுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 28 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கையில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் அதிகளவு கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு மீனவர்கள் மாற்றி வருகின்றனர். அதேபோன்று வலைகள் உள்ளிட்ட மீன் பிடி தொழிலுக்கு தேவையான பொருட்களையும் பாதுகாப்பான இடத்திற்கு மீனவர்கள் மாற்றி வைத்துள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 40க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்திற்கு வந்துள்ளனர். இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரையில் அதிகளவு கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டுள்ள பதிவில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழையும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுகோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.