சபரிமலை ஐயப்பா சுவாமி கோயிலில் வரும் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல மகரவிளக்கு கால பூஜக்காக கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்டுபாடுகளும் நீக்கப்பட்டதால் கார்த்திகை ஒன்றாம் தேதி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆரம்ப நாள்களில் சராசரியாக ஐம்பதாயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்த நிலையில் கடந்த வாரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால் சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர். இந்த நிலையில் கேரள ஐகோர்ட் தலையிட்டு சபரிமலையில் பக்தர்களுக்குச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விசாரிதது. ஒரு லட்சத்துக்கு மேல் பக்தர்கள் வந்தால் சமாளிப்பது சிரமம் என் கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஒருநாள் 90 ஆயிரம் பக்தகளை மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிப்பது என கேரள அரசு முடிவு செய்தது. ஆனாலும் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்து வருகிறது. நிலக்கல்லில் வாகன பார்க்கிங் ஏரியா நிரம்பி வழிகிறது. கூட்டம் கடந்த ஏழுநாள்களாகத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மரக்கூட்டத்தில் இருந்து சன்னிதானம் செல்வதற்கு பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிலாப்பள்ளி வனத்துறை அலுவலகப் பகுதியில் இருந்து நிலக்கல் செல்ல வாகனங்கள் சில மணி நேரம் வரிசயில் நிற்கும் நிலை ஏற்பட்டுளது.
ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய வரிசையில் நிற்பவர்களுக்கு ஐயப்பா சேவா சங்கம் மற்றும் தேவசம்போர்டு சார்பில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் நெரிசல் காரணமாகக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு கிடைக்காமல் மயங்கும் நிலை ஏற்பட்டது. வரும் நாள்களில் அதிகமாக விடுமுறை தினம் வருவதால் பக்தர்கள் அதிக அளவு சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் சிரமத்தைத் தவிற்கும் விதமாக, அவர்களுக்கு தரிசனத்துக்காகத் தனி வரிசை ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருபவர்களையும் இந்த வழியாக அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.